ஐபிஎல் பைனலுக்கு முன்பாகவே ஸ்ரேயாஸ் ஐயர் படைத்த மாஸ் சாதனை..!

நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் அசத்தியிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், கேப்டன் ஆகவும் இந்த சீசனில் சில முக்கியமான சாதனைகளை படைத்திருக்கிறார்.

ஸ்ரேயாஸ் ஐயர்
பிளே ஆப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் நிலையில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் படைத்திருக்கும் மகத்தான சாதனைகள் சிலவற்றை தற்போது பார்க்கலாம்..
கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக் ஆட்டங்களின் முடிவில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
முதல் குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெற்று பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதேபோல நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது அணியாக இறுதி போட்டிக்குள் அடி எடுத்து வைத்திருக்கிறது.
பஞ்சாப் அணியால் 26.75 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும் - பேட்ஸ்மேன் ஆகவும் அந்த அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறார்.
குறிப்பாக நேற்றைய இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மும்பை அணி 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த போதிலும் பஞ்சாப் அணிக்காக அதிரடி பாணியில் பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர், 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து இறுதிக்கட்டம் வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்து அசத்தினார்.
ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான மும்பை அணியின் பந்துவீச்சை சமாளித்து ஆடுவது, அதுவும் நெருக்கடி நிறைந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் இது போன்ற ஒரு பேட்டிங் என்பது அத்தனை சாதாரண விஷயம் கிடையாது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேஹல் வதெராவும் நான்காவது விக்கெட்டுக்கு பக்கபலமாக ஆடினார்
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக 16 போட்டிகளில் 603 ரன்கள் குவித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் அசத்தியிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், கேப்டன் ஆகவும் இந்த சீசனில் சில முக்கியமான சாதனைகளை படைத்திருக்கிறார்.
முதல் முறையாக பஞ்சாப் அணியை வழிநடத்தும் ஸ்ரேயாஸ் ஐயர், தனது முதல் முயற்சியிலேயே பஞ்சாப் அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்று இருப்பதன் மூலம் தான் தலைமை ஏற்று வழி நடத்திய மூன்று வெவ்வேறு அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.
ஏற்கனவே டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 2020 ஆம் ஆண்டிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2024 சீசனிலும் இறுதிப்போட்டியிருக்கு அழைத்துச் சென்ற கேப்டனாக ஸ்ரேயாஸ் உள்ளார்.
மேலும், ஐபிஎல் போட்டியின் பிளே ஆப் சுற்றில் மூன்று அரை சதங்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் படைத்திருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து நாளை இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. இதுவரை மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்ற சோகத்தை நாளை போக்கிக் கொள்ளுமா என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
Arun K author

மதுரைக்காரன்.. பொறியியல் பட்டதாரி.. 10+ ஆண்டுகள் முன்னணி செய்தி நிறுவனங்களி...மேலும் பார்க்க

முடிந்தது
Follow Us:
End of Feed