Bengaluru Stampede: பெரும் துயரமாக மாறிய RCB அணி வெற்றிக் கொண்டாட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலி

RCB Celebration Stampede : பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆர்.சி.பி. அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல ரசிகர்கள் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

18வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியின் 18 ஆண்டு கனவு இதன்மூலம் நனவான நிலையில், நேற்று இரவு முதலே கர்நாடாக மாநில ரசிகர்கள் படு உற்சாகத்துடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் (ஜூன் 4) கோப்பையை வென்ற ஆர்சிபி அணியை வரவேற்க பிரம்மாண்ட கோலாகல ஏற்பாடுகளை அம்மாநில அரசு மேற்கொண்டது. பெங்களூரு வந்த ஆர்.சி.பி. அணி வீரர்களை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் ஆகியோர் நேரில் வரவேற்று பாராட்டுகளை தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக மாலை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிலையில், கோப்பையை வென்ற அணியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திரண்டனர்.
ஒரு கட்டத்தில் மைதானத்திற்குள் நுழைய ரசிகர்கள் முற்பட்ட போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வெற்றிக் கொண்டாட்டத்தில் இத்தகைய துயரம் நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைதானத்திற்குள் நுழைவு சீட்டை பெறாதவர்களும் நுழைய முற்பட்டதே இந்த நெரிசலுக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மைதானத்தின் 3, 10, 21 ஆகிய நுழைவு வாயிலில் தான் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கவலை தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றதே இந்த சோக சம்பவம் அரங்கேற காரணம் என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, கர்நாடாகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு மீது பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளத அரசின் நிர்வாக தவறே இந்த சோக சம்பவம் அரங்கேற காரணம் என பாஜக சாடியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடகா துணை முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
    Kannan V author

    ஹாய், என் பெயர் கண்ணன்.. எழுத்து, ஊடகத்துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால் கடந்...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed