“கோலிக்கு 18 தான்.. ஆனா சச்சின் 22 வருடம் நம்பிக்கையுடன் கோப்பைக்காக காத்திருந்தார்.!” - வீரேந்திர சேவாக்

ஒரு வீரர் கோப்பையை வெல்ல விளையாடுகிறார். பணம் வரும், போகும், ஆனால் கோப்பைகளை வெல்வது எளிதல்ல என சேவாக் கூறியுள்ளார்.

“கோலிக்கு 18 தான் ஆனா சச்சின் 22 வருடம் நம்பிக்கையுடன் கோப்பைக்காக காத்திருந்தார்!” - வீரேந்திர சேவாக்
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி இந்தாண்டு மகுடத்தை சூடியுள்ளது. விராட் கோலி கண்ணீருடன் கோப்பையை கையில் ஏந்தினார். கோலி ஐபிஎல் ஆடிய தொடங்கியதில் இருந்து ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். அதிரடி சூரர் கிறிஸ் கெய்ல், மிஸ்டர் 360 டிவில்லியர்ஸ் என மிரட்டலான பேட்ஸ்மேன்கள் இருந்து அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தது. 18 வருட காத்திருப்புக்கு பின் ரஜத் படிதார் தலைமையில் ஆர்.சி.பி அணி இந்தாண்டு கோப்பையை வென்றது.
ஆர்.சி.பி அணியில் இந்த 18 வருட காத்திருப்பு காலத்தை குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கிடம் ஒரு நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பிய போது “ ஒருநாள் கோப்பைக்காக சச்சின் டெண்டுல்கர் இன்னும் அதிக நாட்கள் காத்திருந்தார். இருப்பினும் அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை எனக் கூறி அசரடித்தார்.’
மேலும் பேசிய சேவாக், “ விராட் கோலி இந்த கோப்பையை வெல்ல 18 ஆண்டுகள் தான் காத்திருந்தார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் 1989 முதல் 2011 வரை, 22 ஆண்டுகள் காத்திருந்தார். கோலியின் காத்திருப்பு காலம் குறைவு. சச்சின் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. சச்சின், தனது கேரியரை உலகக் கோப்பை வெற்றியுடன் முடிக்க முடிவு செய்தார்.
அதேபோல், கோலிக்கும் இப்போது அந்த நிறைவு உணர்வு கிடைத்துவிட்டது. விராட் கோலிக்கும் அதேதான். இப்போது, அவர் நிம்மதியாக இருக்கலாம். அவர் எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் விளையாடுவதை மகிழ்ச்சியுடன் நிறுத்தலாம். ஒரு வீரர் கோப்பையை வெல்ல விளையாடுகிறார். பணம் வரும், போகும், ஆனால் கோப்பைகளை வெல்வது எளிதல்ல.” என்றார்.
சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 6 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். தனது 19வது வயதில் 1992-ஆம் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றார். சச்சின் ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் 6 சதங்களும், 17 அரைசதங்களும் விளாசியுள்ளார். 2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் இளம்வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை தூக்கிக்கொண்டு மும்பை வான்கடே மைதானத்தில் வலம் வந்தனர். அதில் விராட் கோலியும் ஒருவர். இதுகுறித்து அப்போது பேசிய விராட் கோலி, “
சச்சின் டெண்டுல்கர் 21 ஆண்டுகளாக நாட்டின் சுமையைச் சுமந்து வருகிறார். நாங்கள் அவரைச் சுமக்க வேண்டிய நேரம் இது" என்று கூறினார்.
லேட்டஸ்ட்
    Ramprasath author

    மலைக்கோட்டை மண்ணின் மைந்தன். பி.காம் பட்டதாரி. 9 வருடங்களாக பத்திரிகை துறையில் பயணிக்கிறேன். அரசியல், விளையாட்டு, க்ரைம் தொடர்பான செய்திகளை எழுதி வருக...மேலும் பார்க்க

    முடிந்தது